வாஷிங்டன்: அமெரிக்காவும் ஜப்பானும் தற்காப்பு, பொருளியல் துறைகளில் மேலும் அணுக்கமாக ஒத்துழைக்க இணங்கி இருக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இருவரும் வாஷிங்டன் நகரில் சந்தித்தனர்.
"இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் அந்தப் பகுதியில் அமெரிக்கா-ஜப்பான் கூட்டணிதான் அமைதிக்கான அடிப்படையாக இருக்கிறது," என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
தற்காப்பு, பொருளியல் துறைகளில் இருநாடுகளும் மேலும் அணுக்கமாக ஒத்துழைக்கும் என்றும் அவர்கள் சூளுரைத்தனர். பைடன்-கிஷிடா சந்திப்பின் போது சீனாதான் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது.
சீனாவின் மிரட்டல் அதிகமாகி வருவதாகவும் அதனால் அனைத்துலக சட்ட ஒழுங்கும் வட்டார நிலைப்பாடும் மிரட்டலுக்கு உள்ளாவதாகவும் அந்த இரு தலைவர்களும் கூறினர்.
வெள்ளை மாளிகையில் ஜப்பானிய பிரதமரை வரவேற்று உபசரித்த அமெரிக்க அதிபர், இருநாடுகளும் தங்கள் ராணுவக் கூட்டணியை நவீனப்படுத்தி வருவதாகக் கூறினார்.
ஜப்பான், தன் தற்காப்புக்காக இதுவரை இல்லாத அளவுக்குச் செலவிடத் திட்டமிட்டுள்ளது.
இதற்கும் ஜப்பானின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கும் அமெரிக்கா ஆதரவு அளிப்ப தாகவும் திரு பைடன் குறிப்பிட்டார்.
"தெள்ளத்தெளிவாகச் சொல்கிறேன். அமெரிக்கா-ஜப்பான் கூட்டணியை, அதைவிட முக்கியமாக ஜப்பானின் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த முழுமையாக, முற்றிலுமாக அமெரிக்கா கடப்பாடு கொண்டுள்ளது," என்று அதிபர் பைடன் உறுதிகூறினார்.
அமைதிக்குப் பாதிப்பு இல்லாத வழிகளில் விண்வெளியை ஆராய்வதில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் உடன்பாட்டில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இரு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
சீனா, வடகொரியா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் அமைதியையும் செழிப்பையும் கெடுக்கின்றன என்று அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

