வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் அவசரநிலையை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் தேதியிலிருந்து அந்த மாநிலத்தைக் கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள், மின்தடை ஆகியவை உலுக்கி வருகின்றன.
இதனால் கலிஃபோர்னியா மக்கள் பலர் தங்கள் வீடுகளி
லிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் காரணமாக இதுவரை குறைந்தது 19 பேர் மாண்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை கூறியது.
நேற்று முன்தினம் கலிஃபோர்னியாவில் நிலைமை மோசமடைந்தது. கனமழையுடன், கடுமையான பனிப்பொழிவும் பலத்த காற்றும் அம்மாநிலத்தைப் புரட்டிப் போட்டது.
இந்நிலையில், அடுத்த வாரத்தில் நிலைமை சற்று மேம்படலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது 24,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கலிஃபோர்னியா முழுவதிலும் வெள்ள அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அத்துடன் பாதிப்படையக்கூடிய இடங்களில் வசிப்போர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சேன்டா குரூஸ் கவுண்டி ஒரே வாரத்தில் இருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் அங்கு மூன்று முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அங்கு வெள்ளம் சற்று வடிந்த பிறகு குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தம் செய்தனர்.
இதே நிலை தங்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் விரக்தி அடைந்திருப்பதாகக் குடியிருப்பாளர்கள் குறைகூறினர்.
"கடந்த இரண்டு ஆண்டுகளில் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாண்டோரின் எண்ணிக்கையைவிட கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம்," என்று கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சியேரா நிவேடாவில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவுடன் பலத்த காற்று வீசியதை அடுத்து, அங்குள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கலிஃபோர்னியாவில் உயிர்ச் சேதம் ஏற்படாதிருக்க மீட்புப் பணியாளர்களும் அதிகாரிகளும் விழிப்புநிலையில் இருப்பதாகவும் நிலைமை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளம் காரணமாகப் பல வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

