சூரிச்: அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் எல்லன், சீன துணைப் பிரதமர் லியு ஹி இருவரும் சந்தித்துப் பேசினர்.
வேறுபாடுகளைக் களையவும் இரு தரப்புக்கும் இடையிலான போட்டாபோட்டி பெரும் பிரச்சினையாகிவிடாமல் தடுக்கவும் இரு தலைவர்களும் உறுதி கூறினர். சீன-அமெரிக்க அதிபர்கள் சென்ற நவம்பரில் சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.
அதற்குப் பிறகு ஆக உயரிய நிலையில் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு சுவிட்சர்லாந்தில் நடந்தது.
அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான தளத்தை ஏற்படுத்த தான் தயார் என்று சீன துணைப் பிரதமர் லியு தெரிவித்தார்.
சூழ்நிலைகள் எப்படி மாறினாலும் நாம் எப்போதுமே பிரச்சினைகளுக்குப் பேச்சு மூலமே தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
செய்தியாளர்கள் உடனிருக்க சீன துணைப் பிரதமரிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர், தவறான புரிந்துணர்வு காரணமாக தேவையில்லாமல் இரு தரப்பு பொருளியல், நிதி உறவுகளைப் பாதித்துவிட அனுமதித்துவிடக் கூடாது என்று தெரிவித்தார்.
சீனா, அமெரிக்கா இரு நாடுகளுமே பொருளியல் சவால்களை எதிர்நோக்குகின்றன. அவற்றோடு, உக்ரேன் போர் காரணமாக உலகப் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளியல் அரங்கம் அமைப்பின் கூட்டத்தில் சீனாவின் பொருளியல் இலக்குகளை முன்னதாக திரு லியு முன்வைத்தார்.
கடுமையாகப் பாடுபட்டால் இந்த ஆண்டில் சீனாவின் வளர்ச்சி வழக்கமான அளவுக்கு திரும்பிவிடும். சீனப் பொருளியல் கணிசமான மேம்பாடுகளைக் காணும் என்று அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு ஸாம்பியா, செனகல், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்க நிதிஅமைச்சர் செல்கிறார்.
இந்தோனீசியாவில் கடந்த நவம்பரில் ஜி20 கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான வழிகளைப் பற்றி ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்போவதாக அந்த இரு தலைவர்களும் அப்போது தெரிவித்து இருந்தனர்.

