வாஷிங்டன்: உக்ரேனுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.3 பில்லியன்) பெறுமானமுள்ள ராணுவ உதவியை வழங்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில் நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் ஆகியவை அடங்கும்.
இந்த உதவித் திட்டத்தில் 59 பிராட்லி போர் வாகனங்கள், 90 ஸ்ட்ரைக்கர் கவச வாகனம், 53 கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், 350 உயர் நடமாட்ட பன்னோக்கு வாகனங்கள் முதலியவை அடங்கும் என்று அமெரிக்க தற்காப்புத் துறை கூறியது.
கவச வாகனமான பிராட்லி போர் வாகனம் சக்திவாய்ந்த துப்பாக்கியைக் கொண்டது.
1980களின் நடுப்பகுதியிலிருந்து பல்வேறு போர்க்களங்களில் அமெரிக்கப் படைகள் அதைப் பயன்படுத்தி வருகின்றன.
ஒட்டுமொத்த அடிப்படையில், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனின் பாதுகாப்புக்காக 27.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. உக்ரேனுக்கு உதவி செய்யும் நோக்கில் பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் உறுதி அளித்துள்ளன.
இந்நிலையில், பனிக்காலமாக இருப்பதால் நிலவரம் ரஷ்யாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன. தனது படைகளை மீண்டும் ஒன்று திரட்டி உக்ரேனுக்கு எதிராகப் பெருமளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மேற்கத்திய நாடு
களிடம் உக்ரேன் கூடுதல் உதவி கேட்டு வருகிறது.

