கொழும்பு: பொருளியல் நெருக்கடியால் நிலைகுலைந்திருக்கும் இலங்கை, அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3.8 பில்லியன்) பெறுமான கடனைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்கு அதனிடம் கடன் கொடுத்த நாடுகளின் ஆதரவு அந்நாட்டுக்குத் தேவை. இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இந்தியா ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துவிட்டது.
கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு இந்தியா உறுதி அளித்துள்ளது. இப்போது சீனாவின் ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது.
22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இலங்கை கடந்த ஓராண்டாக வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, நினைத்துப் பார்க்க முடியாத பணவீக்கம், மிகக் கடுமையான பொருளியல் மந்தநிலை ஆகியவற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இதுவே இலங்கை சந்திக்கும் ஆக மோசமான பொருளியல் நெருக்கடிநிலை.
இதிலிருந்து மீண்டுவர அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து இலங்கை நிதியுதவியை நாடியுள்ளது.
"கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்களை வெளியிடுவது சிரமம். அவை ரகசியம் காக்கப்பட வேண்டியவை.
"இருப்பினும், சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் சில நாள்களில் அதனிடமிருந்து நிதி உத்தரவாதங்கள் கிடைத்துவிடும் என நம்புகிறோம்," என்று இலங்கையின் துணை நிதிச் செயலாளர் பிரியந்தா ரத்னநாயக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சீனா இலங்கையுடன் நீடித்த தொடர்பில் இருந்து வருவதாக அவர் கூறினார். 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை சீனாவிடம் இலங்கை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா கடப்பாடு கொண்டிருப்பதாக இலங்கைக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை அவர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். உள்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி தொழில்துறை, சுகாதாரச் சேவைகள் ஆகியவை தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்குடன் வர்த்தகத்துக்கு ஏற்புடைய சூழலை இலங்கை அரசாங்கம் அமைத்துத் தரும் என நம்புகிறோம்," என்று திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

