உக்ரேனுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
வாஷிங்டன்: உக்ரேன் படையினர் ஆயுதப் பயிற்சி பெறும் வரை ரஷ்யப் படைகளுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக பைடன் நிர்வாக அதிகாரி ஒருவர் சொன்னார்.
பெயர் வெளியிட விரும்பாத அவர், தற்போதைய நிலையில், உக்ரேனுக்கு ஆப்ரேம்ஸ் டாங்கிகளை வழங்குவதில்லை என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் சொன்னார்.
புதிய ஆயுதங்கள் கிடைக்கும்போது அவற்றைப் பயிற்சி பெற்ற பின் உக்ரேனிய படையினர் பயன்படுத்தினால், தாக்குதல் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
உக்ரேனுக்கு மேலும் 2.5 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வாரம் கூறியிருந்தார்.
பக்முத் நகரத்தை ரஷ்யாவிடம் இழந்துவிடாமல் இருக்க உக்ரேன் பெருமளவு ஆயுதங்களைப் பயன்படுத்தியிருந்தாலும், ரஷ்யா உக்ரேனியர்களை அங்கிருந்து விரட்டுவதற்கான சாத்தியம் உள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
அப்படி நடந்தால், போரில் முன்னேற்றம் எதுவும் இருக்காது என்றார் அந்த அதிகாரி.
பீரங்கித் தாக்குதல் மூலம் ரஷ்யாவைச் சுற்றி வளைப்பதைத் தவிர்த்து, தனது போர் அணுகுமுறையை உக்ரேன் சரிசெய்யுமாறும் அமெரிக்க அதிகாரிகள் அறிவுறத்தியுள்ளனர்.
இதற்கிடையே, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான விலை உச்சவரம்பை மறுபரிசீலனை செய்ய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
ரஷ்யாவின் வருவாயை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போதைய விலையான
60 அமெரிக்கா டாலரைவிடவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்ய சில ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.

