ஓஸ்லோ: உக்ரேனுடனான போரில் ரஷ்யத் துருப்பினர் 180,000 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமுற்றனர் என்று நார்வே நாட்டைச் சேர்ந்த ராணுவத் தலைவர் கணித்துள்ளார். உக்ரேன் தரப்பில் 100,000 ராணுவ வீர்கள் உயிரிழந்தோ காயமுற்றோ இருக்கக்கூடும் என்றும் அவர் 'டிவி12' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
"இந்த மோசமான போரில் உக்ரேனிய பொதுமக்களில் கிட்டத்தட்ட 30,000 பேர் உயிரிழந்திருப்பார்கள். 100,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டதால் உக்ரேன் தரப்பில் சேதம் அதிகம்," என்றார் நார்வே தற்காப்புப் படைத் தலைவரான எரிக் கிறிஸ்டோஃபர்சன்.
"அதேநேரம் கடுமையான இழப்பு ஏற்பட்டபோதிலும் ரஷ்யா நீண்டகாலமாக போரைத் தொடர்ந்து வருகிறது," என்று மாஸ்கோவின் ராணுவ நடமாட்டம் மற்றும் ஆயுத உற்பத்தித் திறன்கனை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் திரு கிறிஸ்டஃபர்சன் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த உயிர்ச்
சேதம் அல்லது காயம் எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
கிட்டத்தட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் ரஷ்ய-உக்ரேன் போரில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரங்களை இரு நாடுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடாத நிலையில் இவர் இந்தக் கணிப்பைத் தெரிவித்துள்ளார்.
போர் விமானங்களை முறியடிக்கக்கூடிய சிறந்த தற்காப்புத் திறனை உக்ரேன் பெற்றிருப்பதாகக் கூறிய அவர், ரஷ்யாவின் ஆகாயப் படைத் தாக்குதலை உக்ரேன் தொடர்ந்து முறியடிக்குமா என்பது கவலைக்குரிய கேள்வி என்றார்.
காரணம், அண்மைய மாதங்களாக ரஷ்யப் படை நடத்தி வரும் தாக்குதல் நீண்டதூரம் பாயக்
கூடிய ஏவுகணைகளின் உதவியோடு மேற்கொள்ளப்படுபவை என்றும் திரு கிறிஸ்டஃபர்சன் தெரிவித்தார். உக்ரேனுக்கு எதிர்ப்புப் பீரங்கிகள் அதிகம் தேவைப்படுவதாகவும் அதனை உக்ரேன் ஆதரவு நாடுகள் விரைவாக வழங்கி உதவுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ராணுவத் தலைவர்களில் ஒருவரான மார்க் மைலி, ரஷ்யத் தரப்பில் 100,000க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மாண்டுவிட்டார்கள் அல்லது காயமடைந்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.
உக்ரேனியத் தரப்பிலும் கிட்டத்தட்ட இதேமாதிரியான பாதிப்பு நிகழ்ந்திருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்த எண்ணிக்கை எந்த அடிப்படையிலானது என்ற விவரம் அப் போதும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ரஷ்யாவைத் தோற்கடிப்பதில் உதவ ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கவச வாகனங்கள் தனக்குத் தேவை என்று மேற்கத்திய நாடுகளிடம் உக்ரேன் வலியுறுத்தியது. அதற்கு போலந்து உடனடியாக செவிசாய்த்துள்ளது.
தான் ஏற்றுமதி செய்த கவச வாகனங்களை உக்ரேனுக்கு போலந்து வழங்கினால் அதன் குறுக்கே நிற்கப்போவதில்லை என ஜெர்மனி நேற்று கூறியது.

