லண்டன்: பணவீக்க அதிகரிப்புக்கு நிகரான சம்பள உயர்வு கேட்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தில் நேற்று மேலும் பல தொழிற்சங்கங்கள் இணைந்ததால் அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.
யூனிசன், யுனைட் மற்றும் ஜிஎம்பி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக முதல்முறையாக கைகோர்த்துள்ளனர்.
போராடும் அதேநேரம் பொதுமக்கள் பாதிக்கப்படாது இருக்க அவசரத் தேவைகளுக்கு 999 என்ற எண்ணை மட்டுமே அழைக்குமாறு தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டு உள்ளன.
15,000 யூனிசன் ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் லிவர்பூலில் உள்ள தேசிய சுகாதாரச் சேவையைச் சேர்ந்த 5,000 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என்று போராட்டத்தை வழிநடத்தும் யூனிசன் தெரிவித்துள்ளது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தேசிய சுகாதாரச் சேவை ஊழியர்களுக்கு ஈரிலக்க விழுக்காட்டு சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்று யுனைட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் 'ஸ்கை நியூஸ்' செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"அனுபவ ஊழியர்களுக்கு அவர்களின் திறனுக்கேற்ற அதிக சம்பளம் வழங்கப்பட்டால் அவர்கள் வெளியேறிச் செல்லாமல் தடுக்க முடியும்.
"மேலும், தேசிய சுகாதாரச் சேவையில் இணைந்து பணி யாற்ற அதிகமானோரை ஈர்க்க சம்பள உயர்வு உதவும்," என்றார் அவர்.

