இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட மின்தடையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் மின்துறை தெரிவித்தது. இது கடந்த மூன்று மாதங்களில் அங்கு நிகழ்ந்திருக்கும் இரண்டாவது பெரிய மின்தடை.
தென்பகுதி சிந்து மாநிலத்தில் மின்னோட்டம் ஏற்ற இறக்கமாக இருந்ததாகவும் அதனால் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்
கூடங்கள் அவதியுற்றதாகவும் மின்துறை அமைச்சர் குரும் தஸ்தகிர் கூறினார்.
தலைநகர் இஸ்லாமாபாத் தொடங்கி, தென்பகுதித் துறைமுக நகர் கராச்சி, கிழக்குப் பகுதி லாகூர், வடக்குப் பகுதி பெஷாவர் என நாட்டைச் சுற்றிலும் மின்தடை பலமணி நேரத்திற்கு நீடித்தது. குறிப்பாக, பெஷாவர் நகரில் உள்ள குடிநீர் குழாய்கள் மின்சாரத்தில் இயங்குவதால் நேற்று அந்நகர் மக்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி சிரமப்பட்டனர்.
பாகிஸ்தானின் மின்சார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது. மேம்பாடு இல்லாததால் அங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அக்டோபர் மாதம் ஏற்பட்ட மின்தடை வழக்கநிலைக்குத் திரும்ப பலமணி நேரம் ஆனது.

