ஆக்லாந்து: நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் நேற்று பதவி ஏற்றார். அண்மையில் திருவாட்டி ஜெசின்டா ஆர்டன் எதிர்பாராத விதமாக அப்
பதவியிலிருந்து விலகினார்.
திரு ஹிப்கின்சுக்குப் பிரதமர் லீ சியன் லூங் தமது வாழ்த்து
களைத் தெரிவித்துக்கொண்டார். நியூசிலாந்துப் பிரதமர் பதவியி
லிருந்து விலக திருவாட்டி ஆர்டன் எடுத்த முடிவு வருத்தமளித்தபோதிலும் அவர் அவ்வாறு செய்ததற்கான காரணங்கள் தமக்குப் புரிவதாக திரு லீ தெரிவித்தார்.
திருவாட்டி ஆர்டன் தாம் பதவி விலகப்போவதாக அறிவித்தபோது அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததாகவும் அதைப் பார்த்து தாம் மனம் நெகிழ்ந்ததாகவும் திரு லீ கூறினார். பொறுப்புகளை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு, நல்ல ஓய்வுக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, பொது வாழ்வில் வேறு வகைகளில் திருவாட்டி ஆர்டன் பங்களிக்க வேண்டும் எனத் திரு லீ விருப்பம் தெரிவித்தார்.
திருவாட்டி ஆர்டன் அளவுக்கு திரு ஹிப்கின்ஸ் பிரபலமானவர் அல்ல. இருப்பினும், அவரது அரசியல் ஆற்றல் பற்றி அந்நாட்டினர் நன்கு அறிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் பதவியிலிருந்து திருவாட்டி ஆர்டன் விலகிவிட்டபோதிலும் அவருக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவர் பிரதமராக இருந்தபோது அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களே இதற்கு காரணம். திருவாட்டி ஆர்டனுக்கு எதிராக இணையம் மூலம் மிக மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதாகவும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.