லீக் கிண்ண இறுதி ஆட்டத்தை
நெருங்கும் நியூகாசல் யுனைடெட்
லண்டன்: இங்கிலாந்தின் லீக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தை நியூகாசல் யுனைடெட் நெருங்கி உள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்துக்கான முதல் சுற்று ஆட்டத்தில் சவுத்ஹேம்டன் குழுவை அது 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
நியூகாசலின் வெற்றி கோலை அதன் நட்சத்திர வீரர் ஜோலின்டன் (படம்) போட்டார்.
லீக் கிண்ண இறுதி ஆட்டத்துக்கு நியூகாசல் ஆகக் கடைசியாக 1999ஆம் ஆண்டில் தகுதி பெற்றது. அரையிறுதிக்கான இரண்டாம் சுற்று ஆட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமையன்று நியூகாசலின் செயிண்ட் ஜேம்சஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டும் மோதுகின்றன.
ஃபிராங்க் லேம்பார்ட்டைப் பதவி நீக்கம் செய்த எவர்ட்டன்
லிவர்பூல்: எவர்ட்டன் அதன் நிர்வாகியான ஃபிராங்க் லேம்பார்ட்டை பதவி நீக்கம் செய்துள்ளது. கடந்த 12 ஆட்டங்களில் ஒன்பது ஆட்டங்களில் எவர்ட்டன் தோல்வி அடைந்து அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் லேம்பார்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிர்வாகியை எவர்ட்டன் தேடி வருகிறது.
நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்திய கிரிக்கெட் அணி
இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்தை இந்திய அணி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இந்தூரில் நடந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து பந்தடித்த நியூசிலாந்து 41.2 ஓவர்களில் 295 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்தியா 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.