மணிலா: பிலிப்பீன்ஸ் ஆகாயப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த இரண்டு விமானிகள் மாண்டனர். இந்தச் சம்பவம் நேற்று காலை தலைநகர் மணிலாவுக்கு 133 கிலோமீட்டர் தூரம் மேற்கில் இருக்கும் பட்டான் மாநிலத்தின் பிலார் நகரில் நிகழ்ந்தது.
விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பிலிப்பீன்ஸ் காவல்துறை கூறியது. காலை 10 மணி அளவில் விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் ஏறத்தாழ 35 நிமிடங்கள் கழித்து அது விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம் எஸ்எஃப்260 டிபி ரகத்தைச் சேர்ந்தது என்று பிலிப்பீன்ஸ் ஆகாயப் படை கூறியது.
அவ்வகை விமானங்களை பலமுறை பயன்படுத்தி இருப்பதாகவும் குறிப்பாக, 2017ஆம் ஆண்டு மராவி நகரைக் கைப்பற்றிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் அவை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் பிலிப்பீன்ஸ் ஆகாயப் படையிடம் இருக்கும் அவ்வகை விமானங்கள் தற்போதைக்குப் பயன்படுத்தப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.