ஜோகூர் பாரு: ஜொகூரிலிருந்து வேலைக்காக சிங்கப்பூர் வரும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் குடிநுழைவுச் சாவடி அருகிலுள்ள இடத்தில் தங்கள் கார்களையும் மோட்டார்சைக்கிள்களையும் நிறுத்திவைத்து விட்டுச் செல்வதால் அப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கிம் டெங் பார்க்கில் உள்ள ஜாலான் ஸ்டோரி, பாங்குனான் சுல்தான் இஸ்கந்தரில் உள்ள சுங்க, குடி நுழைவுச் சாவடியிலிருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது.
அதனால் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சிங்கப்பூர் வருகின்றனர்.
அந்த வாகனங்கள் மணிக் கணக்காகவும் சில நேரங்களில் நாள்கணக்காகவும் வீடுகள், கடைகள் ஆகியவற்றின் முன் நிற்கின்றன. அப் பகுதிவாசிகள், கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க சிலர், வீட்டின் முன்னால் குப்பைத் தொட்டிகளை வைக்கின்றனர்.
அந்த வாகனங்களை இழுத்துச் செல்லும்படி அல்லது அபராதம் விதிக்கும்படி ஜோகூர் பாரு நகரமன்றத்தை அப்பகுதிமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

