சிட்னி: ஆஸ்திரேலிய தேசிய தினத்தன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டு பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் பேரணிகளை நடத்தியுள்ளனர். பிரிட்டிஷ் கப்பல்கள் சிட்னி துறைமுகத்துக்குள் நுழைந்த ஜனவரி 26ஆம் தேதி ஆஸ்திரேலிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அது தாக்குதல் தினமாகக் கருதப்பட வேண்டும் என்று பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.
சிட்னி, பிரிஸ்பன், அடிலேட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்லாயிரம் பேர் திரண்டனர். கறுப்பு, சிவப்பு நிறத்தில் மஞ்சள் வட்டம் பொறிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கொடிகளைத் தாங்கி, அவர்களின் பாரம் பரியச் சடங்குகளை நடத்தினர்.
தலைநகர் கேன்பராவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் நேற்று பேசிய ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், அந்நிலத்தில் குறைந்தது 65,000 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பூர்வீக மக்களை கௌரவித்தார்.
"உலகின் தொடர்ச்சியான ஆகப் பழைய பண்பாட்டுடன் இந்தக் கண்டத்தில் நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற தனிச்சிறப்பு நமக்கு உள்ளது," என்றார் திரு அல்பனீஸ்.
பழங்குடி மக்களுக்கு இது சிரமமான நாள் என்பதை உணர்ந்தபோதும், ஆஸ்திரேலிய தினத்தை வேறு நாளுக்கு மாற்றத் திட்டமில்லை என்று அவர் கூறினார். ஆஸ்திரேலியாவின் சுமார் 880,000 பழங்குடி மக்கள் சமூக, பொருளியல் ரீதியாகப் பின்தங்கியுள்ளனர்.

