கியவ்: அமெரிக்காவும் ஜெர்மனியும் டாங்குகளை அனுப்பி உக்ரேனுக்கு உதவ இணங்கிய மறுநாள் ரஷ்யா உக்ரேன்மீது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.
நேற்று காலை உச்சநேரக் போக்குவரத்தின்போது ரஷ்யா அதன் போர் விமானங்களை அனுப்பி உக்ரேனைத் தாக்கியது.
தலைநகர் கியவ்வில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். விமானத் தாக்குதல் நடைபெறும் என்ற எச்சரிக்கைச் சங்கு ஒலித்ததும் கியவ்வின் ரயில் நிலையங்களில் பலர் பாதுகாப்பான இடங்களைத் தேடி மறைந்துகொண்டனர். அங்குள்ள மின்சாரக் கட்டமைப்பை ரஷ்யப் போர்விமானங்கள் தாக்கின. அதைத் தொடர்ந்து பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.
தாக்குதலில் கருங்கடல் வட்டாரத்தில் உள்ள ஒடெசாவில் இரண்டு முக்கிய மின்சார நிலையங்களும் சேதமடைந்தன. யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாட்டு கல்வி, சமூக, கலாசார, கல்வி அமைப்பு நேற்றுமுன்தினம் ஒடெசாவை ஆபத்தில் உள்ள மரபுடைமை நகராக அறிவித்தது.
ரஷ்யா, கப்பல் வழியாகவும் விமானம் வழியாகவும் உக்ரேன் மீது நேற்று 55 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அவற்றில் 47 ஏவுகணைகளைச் சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரேனிய ராணுவ அதிகாரிகள் கூறினர்.
உக்ரேனுக்கு 30 டாங்குகளை அனுப்பப்போவதாக அமெரிக்காவும் 14 டாங்குகளை அனுப்பப்போவதாக ஜெர்மனியும் நேற்று முன்தினம் கூறியிருந்தன.
டாங்குகளை விரைவாக அனுப்பும்படி அந்நாடுகளைக் கேட்டுக்கொண்ட உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி, போர்விமானங்களும் நீண்டதொலைவு ஏவுகணைகளும் தேவை என்றார். அமெரிக்காவும் ஜெர்மனியும் டாங்குகளை அனுப்பி போரில் நேரடியாகத் தலையிடுவதாக ரஷ்யா அதை எதிர்த்தது.

