ஜோகூர் பாரு: மலேசியாவின் பொது வீடமைப்புத் திட்டங்களை மேம்படுத்த அதுகுறித்து சிங்கப்பூரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற வெட்கப்படத் தேவையில்லை என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்தை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி ஜோகூரின் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சீ கேட்டுக்கொண்டார்.
மலேசியாவில் ஆண்டுதோறும் வீட்டு விலை அதிகரித்து வருவதால் வீடு வாங்க மலேசியர்கள் சிரமப்படுவதை அவர் சுட்டினார்.
அதுமட்டுமல்லாது, மலேசியாவில் குறிப்பாக முக்கிய நகரங்களில் கட்டுப்படியான விலையிலான வீடுகள் போதுமான அளவில் இல்லாதது கவலை அளிப்பதாக திரு புவா கூறினார்.
"வீட்டு உரிமை விவகாரம் குறித்து மலேசியர்கள் எதிர்நோக்கும் பிரிச்சினைக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் முயன்று வருகிறது. அதுகுறித்து அது சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது," என்று திரு புவா நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் உட்பட மற்ற நாடுகளிடமிருந்து வீடமைப்பு தொடர்பாக ஆலோசனைகளைப் பெற அந்நாட்டில் உள்ள வீடமைப்பு நிபுணர்களை மலேசிய அரசாங்கம் நாடியிருப்பதாக அவர் கூறினார். மலேசியாவில் நிலவும் வீடமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண பிற நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகள் ஆராயப்படும் என்று இம்மாதம் 17ஆம் தேதியன்று மலேசியாவின் உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்திருந்தார்.
கட்டுப்படியான விலையில் உள்ள வீடுகளைக் கட்டுவதில் தங்களுக்கு இருக்கும் அனுபவங்களையும் ஆற்றலையும் மலேசியாவிடம் பகிர்ந்துகொள்ள சிங்கப்பூரின் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஒப்பந்த
தாரர்கள் பிப்ரவரி மாதம் மலேசியாவுக்குச் செல்வதாக திரு ஙா கூறினார். இதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
திரு ஙாவின் இத்திட்டத்தைச் சிலர் வரவேற்றுள்ளனர். ஆனால், சிலர் அதுகுறித்து அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
கெடா மாநில முதல்வர் முகம்மது சனுசி முகம்மது நூர் உட்பட பல அரசியல்வாதிகள் திரு ஙாவின் திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இத்தகைய விமர்சனங்கள் தேவையற்றவை என்று கூறிய திரு புவா, மலேசியர்களுக்கும் கட்டுப்படியான விலையில் வீடு
களைக் கட்டித் தருவதில் மலேசிய அரசு ஊழியர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். இருப்பினும் மலேசியாவின் பொது வீடமைப்புத் திட்டத்தை மேம்படுத்த சிங்கப்பூரிடம் ஆலோசனை பெறுவதில் தவறேதும் இல்லை என்றார் அவர். சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டம் உலகிலேயே மிகச் சிறந்த வீடமைப்பு திட்டங்களில் ஒன்றாகும் என்றார் அவர்.

