சோல்: கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொவிட்-19 பரவல் குறைந்துவிட்டதால் பெரும்பாலான உட்புறங்களில் கட்டாய முகக்கவச விதியை தென்கொரியா தளர்த்தியுள்ளது.
இதனையடுத்து, பள்ளிகள், பாலர் பள்ளிகள், உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்குத் தென்கொரியர்கள் முகக்கவசமின்றிச் செல்லலாம்.
ஆயினும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து ஆகிய இடங்களில் கட்டாய முகக்கவச நடைமுறை தொடர்ந்து நீடிக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 7,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 4ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவாகப் பதிவான ஒருநாள் தொற்று எண்ணிக்கை. 2022 ஜூலை 4ஆம் தேதி 6,239 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தென்கொரியாவில் இதுவரை 30,157,017 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அவர்களில் 33,420 பேர் இறந்துவிட்டனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் அங்கு வெளிப்புறங்களில் கட்டாய முகக்கவச விதிமுறை தளர்த்தப்பட்டது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்படியாக அமைந்தது.