"அன்வாரின் கெஅடிலான் (பிகேஆர்) கட்சியில் சேர உறுப்பினர் படிவத்தை வரும் 4ஆம் தேதி சமர்ப்பிக்கிறேன். என்னைப் பின்பற்றி பல அம்னோ தலைவர்கள் பிகேஆர் கட்சியில் சேரவிருக்கின்றனர்," என்று ஸாஹிடி ஸைனூல் அபிடின் கூறியுள்ளார்.
வரும் 4ஆம் தேதி பிகேஆர் கட்சி யிடம் உறுப்பினர் படிவத்தை கொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஸாஹிடி, அம்னோ வைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள் பலர் பிகேஆர் கட்சியில் இணைய விரும்புகின்றனர் என்றார்.
"பாடாங் பெசார் அம்னோ பிரிவைச் சேர்ந்த 100 பேருடன் நான் அதிகாரபூர்வமாக பிகேஆர் கட்சியில் இணைகிறேன். பாடாங் பெசாரில் உள்ள பல கிளைகளும் விரைவில் கலைக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள பாடாங் பெசாரின் நாடாளு மன்ற உறுப்பினராக ஸாஹிடி இருந்து வந்துள்ளார்.
ஆனால் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி யைத் தழுவினார்.
"அம்னோவில் உள்ள பலர் பிகேஆர் கட்சியில் எப்படி சேர்வது என்பது பற்றி என்னிடம் கேட்டுள்ளனர். இவர்களில் உச்சமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குவர்," என்று ஸாஹிடி கூறியதாக சினார் ஹரியான் குறிப்பிட்டது.
அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடியும் உச்சமன்றமும் உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் பலரை நீக்கியது, இடைநீக்கம் செய்தது கட்சித் தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி ஜமாலுதீனை கட்சியிலிருந்து அம்னோ நீக்கியது. முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் உசேன் உட்பட பல உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போதைய மலேசிய துணைப் பிரதமரான ஸாஹிட், தன்னுடன் ஒத்துப்போகாத தலைவர்களை நீக்கியிருப்பதாக திரு ஸாஹிடி விமர்சித்துள்ளார்.
"நல்லவேளை, நம் நாட்டில் உள்ள நீதிபதிகளை ஸாஹிட் தொட முடியாது. இல்லையென்றால் அவர்களையும் பதவியிலிருந்து அவர் நீக்கியிருப்பார்," என்று திரு ஸாஹிடி சொன்னார்.
ஆனால் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் உடனடியாக பிகேஆர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா என்பது தெரியவில்லை.
ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம்பெற்ற கட்சி களின் கருத்துகளை அறிந்து விலக்கப்பட்ட அம்னோ தலைவர் களை சேர்த்துக்கொள்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் கூறியிருப்பதாக பெர்னாமா தெரிவிக்கிறது.
தற்போதைய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளிடையே ஒத்துழைப்பைக் கட்டிக்காக்கும் நோக்கத்தில் பிகேஆர் இவ்வாறு முடிவு செய்துள்ளதாகத் தெரி கிறது.

