சிங்கப்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஏழை களைப் பாதிக்கும் வரிகளை உயர்த்தாமல் நாட்டின் கடன் படிப்படியாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுக்கும் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கு வருகை அளித்துள்ள அவர், நேற்று புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
"நாங்கள் கடன் உச்ச வரம்பைத் தொட்டுவிட்டோம். இனி இதைப் படிப்படியாக குறைத் தாக வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கு இது பொறுப்பற்ற செயலாகி விடும்," என்றார் அவர்.
கொள்ளைநோய் பரவலின் தொடக்ககாலத்தில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் வரம்பு 2020ல் 55 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. 2021ல் கூடுதல் கடன் வாங்கு வதற்கும் பொருளியலைத் தூண்டுவதற்கான நிதியைப் பெறவும் அந்த உச்சவரம்பு 65$க்கு அதிகரிக்கப்பட்டது.
மலேசியாவின் கடன் உச்ச வரம்பு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61 விழுக்காடாக உள்ளது. கடன் உச்ச வரம்பை உயர்த்துவதை அனுமதிக்கும் சட்டம் டிசம்பர் 31ஆம் தேதியோடு காலாவதியானது.
கடன் அமைப்புகளான மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் மற்றும் எஸ்அண்ட்பி குளோபல் ரேட்டிங்ஸ், மலேசியாவை 'ஏ' நிலையில் வைத்துள்ளன. அதே சமயத்தில் மலேசிய அரசாங்கம் கடன் விகிதத்தைக் குறைப்பது ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அமைப்பின் சிறந்த வகையிலான கடன் புள்ளிகளைப் பெறுவதற்கு மிக முக்கியம். இந்த நிலையில் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராகிம், 2023ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை பிப்ரவரி 24ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இதில் கடனை குறைக்கும் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

