கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வாரின் பொருளியல், நிதி மூத்த ஆலோசகராக அவரது மகள் நூருல் இஸா கடந்த மாதம் 3ஆம் தேதி நியமிக்கப்பட்டதில் தவறேதும் இல்லை என்று அவரது அரசியல் உதவியாளர் அமிர் எச். கஸாலி தெரிவித்துள்ளார்.
இது தகுதி இல்லாத நிலையில் சொந்தபந்தங்களுக்குப் பதவி கொடுப்பதற்கு ஈடாகாது என்று அவர் வலியுறுத்தினார்.
தமக்கு யார் ஆலோசகராக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்க பிரதமருக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக அவர் கூறினார். திட்டங்கள், ஏலக்குத்தகைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உள்ள தலைமை நிர்வாகயாகவோ
தலைவராகவோ திருவாட்டி நூருல் இஸா பதவி வகிக்கவில்லை என்பதை திரு அமீர் சுட்டினார். பிரதமரின் பொருளியல், நிதி மூத்த ஆலோசகராக திருவாட்டி நூருல் இஸா நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின் உட்பட பல அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், நிதி அமைச்சர் பதவியிலிருந்து அன்வார் விலக வேண்டும் என்றும்
முகைதீன் கூறினார்.

