கியவ்: ரஷ்யப் படைகளுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மிகக் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் பலர் மாண்டதாக அது கூறியது.
புது வியூகம் வகுத்து, மேலும் பல ராணுவ வீரர்களைப் போருக்கு ரஷ்யா அனுப்பியிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதற்குப் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்
படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தின இரவில் மட்டும் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் மடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாள்களில் தனது படைகள் 25 ரஷ்ய கவச வாகனங்களை அழித்ததாக உக்ரேனிய ராணுவம் கூறியது.
உக்ரேன் வெளியிட்ட தரவு
களைச் செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், உக்ரேன் தெரிவிப்பது உண்மையல்ல என்று ரஷ்யா அடித்துக் கூறுகிறது.
தனது படைகளுக்குப்
பேரிழப்பு ஏற்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்தது. அதே சமயத்தில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டதாக அது தகவல் வெளியிட்டது. உக்ரேனிலும் ரஷ்யாவிலும் பனிக்காலம் நிலவு வதால் எதிரிகளின் தாக்குதல்களை மட்டுமன்றி கடுங்குளிர், பனிப்பொழிவு ஆகியவற்றையும் இருதரப்பு ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உக்ரேனை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், எது நடந்தாலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற பிடிவாதத்துடன் உக்ரேனிய ராணுவம் தனது நாட்டைத் தற்காத்து வருகிறது. அதுமட்டுமல்லாது, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் அனுப்பிவைத்துள்ள ஆயுதங்களும் கவச வாகனங்களும் இன்னும் சில நாள்களில் உக்ரேனைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றைப் பெற்றவுடன் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்க உக்ரேனிய படைகள் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும், உக்ரேனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடியாததால் அதன் ராணுவத்துக்கு விரக்தி ஏற்பட்டு பொறுமை இழந்து வருவதாக அறியப்படுகிறது.

