பேங்காக்: தாய்லாந்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது தனது மேசையிலேயே ஊழியர் ஒருவர் மரணமடைந்தார். ஊழியரின் குடும்பத்தாருக்கு அவரின் நிறுவனம் இழப்பீடு வழங்கவுள்ளது.
செய்தியாளரான சாராவுட் ஸ்ரீசாவாட் கடந்த திங்கட்கிழமையன்று வேலையிடத்தில் தனது மேசையில் மயங்கிப் போனார். அவர் டிஎன்என் எனும் தாய்லாந்தின் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். 44 வயது திரு சாராவுட் அந்நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பிரிவில் மூத்த நிர்வாகியாகப் பொறுப்பு வகித்துவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. டிஎன்என், தாய்லாந்தின் மாபெரும் தொடர்பு, தகவல் நிறுவனமான ட்ரூ கார்ப்பரேஷனின் துணை நிறுவனம்.
திரு சாராவுட் வாரந்தோறும் ஏழு நாள்களும் அடிக்கடி கூடுதல் நேரம் வேலை பார்த்து வந்தார் என்று தாய்லாந்தின் பிபிஎஸ் வோர்ல்ட் ஊடகம் தெரிவித்தது. சில வேளைகளில் அவருக்குப் பதிலாக வேலை செய்ய யாரும் இருந்ததில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
மாரடைப்பால் மாண்ட திரு சாராவுட்டின் மரணம் குறித்து தாய்லாந்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.
வேலைப்பளு காரணமாக அவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டால் இறுதிச் சடங்கிற்கென குடும்பத்தாருக்கு 50,000 பாட் (2,000 வெள்ளி) சலுகை வழங்கப்படும். மேலும், 10 ஆண்டுகளுக்கு அவரின் மாதச் சம்பளத்தில் 70 விழுக்காட்டுத் தொகையும் குடும்பத்துக்கு அளிக்கப்படும்.

