பாப் அல்-ஹாவா (சிரியா): துருக்கியையும் சிரியாவையும் உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் உதவிக்கரம் நீட்டுகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின்வசம் இருக்கும் பகுதிகளுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவிப் பொருள்கள் சென்றடைந்தன. மேலும் பல உதவிப் பொருள்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் குறைந்தது 21,000 பேர் மாண்டுவிட்டனர். மேலும் சிலர் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
கடும் குளிர் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது.
நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பலரை மீட்கும் பணிகள் சவாலாக இருந்து வந்துள்ளன.
துருக்கியின் அன்டாக்யா நகரின் மருத்துவமனை ஒன்றிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் சடலங்களைக்கொண்ட பைகள் வைக்கப்பட்டிருந்தன. உறவினர்கள் அவற்றைத் தேடிப் பார்க்கும் நிலை உருவெடுத்தது.
இது, அவலநிலையை எடுத்துக்காட்டும் நிகழ்வாகக் கூறப்படுகிறது.
நிலைமை சரிவரக் கையாளப் படவில்லை என்று துருக்கிய அதிபர் ரிசெப் டாயிப் எர்டுவான் முன்னதாகக் கூறியிருந்தார். அவர் பல தரப்பினரின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
இதற்கிடையே, சிரியாவில் கிளர்ச்சியாளர்களின்வசம் இருக்கும் ஜிண்டேரிஸ் நகரில் இடிபாடுகளில் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் முன்வந்துள்ளனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டபோது இக்குழந்தை தொப்புள்கொடியுடன் காணப்பட்டது.
குழந்தையின் பெற்றோர், நான்கு சகோதரர்கள் அனைவரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் இருக்கும் இப்பெண் குழந்தை உடல்நலத்துடன் உள்ளது.
மிகுந்த சவாலான சூழலில் பிறந்த இக்குழந்தைக்கு அயா என்று பெயரிடப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது. அரபு மொழியில் அயா என்றால் பேரதிசயம் என்று பொருள்.

