கோலாலம்பூர்: போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசைகளைக் காட்டி ஏமாற்றும் கூட்டத்திடம் இருந்து தம் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக அதுதொடர்பான சட்டங்களைக் கடுமையாக்குவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலிக்கிறது.
மியன்மார் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செயல்படும் வேலை மோசடி கும்பல்களால் மலேசியர்கள் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராகிம் சொன்னார்.
"கடினமான நிலைப்பாட்டை கையாள்கிறோம். அத்துடன் மலேசியர்களும் எளிதில் ஏமாந்துபோகாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
"அமைச்சும் காவல்துறையும் சட்டங்களைக் கடுமையாக்குவது உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன," என்று தாய்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் சொன்னார்.
மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியிருந்த ஐவர் அண்மையில் மீட்கப்பட்டனர்.
சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் நல்ல சம்பளத்திற்கு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி கும்பல்கள் மக்களை ஈர்க்கின்றன.
வேலைக்காக அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றவுடன் அவர்களது பயண ஆவணங்கள், கைப்பேசிகளை அவர்கள் பிடுங்கிக்கொள்கின்றனர்.
வேலைக்காக வந்தவர்களைத் தடுத்து வைத்து, அவர்களை இணைய மோசடிக்காரர்களாகவும் இணைய சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களாகவும் செயல்பட கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

