ஹாங்காங்: ஹாங்காங்கில் தமது முன்னாள் முதலாளியால் அடித்தும் தீயினால் சுட்டும் துன்புறுத்தப்பட்ட இந்தோனீசியப் பணிப்பெண்ணிற்கு 868,000 ஹாங்காங் டாலர் (S$147,000) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது 40 வயதாகும் திருவாட்டி கர்த்திக்கா புஸ்பிதாசரி (படம்) என்ற அந்த பணிப்பெண் பத்தாண்டுகளுக்குமுன் கடும் துன்புறுத்தலுக்குள்ளானது ஹாங்காங்கில் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பணிப்பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் போராட்டங்களும் வெடித்தன.
இதனையடுத்து, கர்த்திக்காவின் முதலாளிகளின் மீது 2013ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூடுவைத்தும் இரும்புச் சங்கிலியால் அடித்தும் உடல்ரீதியாகப் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கர்த்திக்கா மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.
தம்மை வழக்கில் வெற்றிபெறச் செய்த வழக்கறிஞர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட கர்த்திக்கா, அவர்கள் தம்மீது வெளிப்படுத்திய அன்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஹாங்காங்கில் ஏறக்குறைய 340,000 பணிப்பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தோனீசியா மற்றும் பிலீப்பீன்சைச் சேர்ந்தவர்கள். படம்: ஏஎஃப்பி

