கோலாலம்பூர்: கடந்த நான்காண்டுகளாக மலேசியாவைப் பெரிதும் பாதித்த நிலையற்ற அரசியல் சூழலைத் தவிர்த்திருக்கலாம்; மக்களுக்குச் சேவையாற்றும் நோக்குடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்திருந்தால் அது சாத்தியமாகியிருக்கும் என்று மலேசிய மாமன்னர் அப்துல்லா அகமது ஷா கூறியுள்ளார்.
மலேசிய நாடாளுமன்ற அமர்வின் தொடக்க உரையில் மாமன்னர் பேசினார். இதுவே நாட்டின் மாமன்னராக அவர் ஆற்றும் கடைசி நாடாளுமன்ற உரை. மலேசிய அரசியலில் தலையிடும் எண்ணம் தமக்கு என்றுமே இருந்ததில்லை என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
"நான்தான் நான்கு வெவ்வேறு அரசாங்கங்களுடனும் நான்கு பிரதமர்களுடனும் பணியாற்றிய ஓரே மாமன்னர் என்பது தேசத்தின் வரலாற்றில் அழிக்கமுடியாத நிகழ்வாக இடம்பெற்றுவிட்டது," என்றார் மாமன்னர். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று அவர் மாமன்னராகப் பொறுப்பேற்றார்.
"மலேசியாவின் ஏழாவது பிரதமர் (டாக்டர் மகாதீர் முகம்மது) பதவி விலகுவதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் நாட்டின் 15வது பொதுத் தேர்தல் வரை நீடித்த நிலையற்ற அரசியல் சூழலும் இருந்திருக்காது," என்று மாமன்னர் கருத்து தெரிவித்தார்.
"எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் நேசிக்கும் தேசம், மக்களின் அக்கறைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் தங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்திருந்தால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நாட்டைப் பாதித்த அரசியல் நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம்," என்றும் அவர் சொன்னார்.
டாக்டர் மகாதீரருக்குப் பிறகு முகைதீன் யாசின், இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் ஆகியோர் பிரதமர் பதவியை வகித்தனர். தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராக இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் தலைவர்களையும் சாடிய மலேசிய மாமன்னர்

