ஜோகூர் பாரு: சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் காஸ்வே கடற்பாலத்தின் ஜோகூர் பாருவின் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் துரிதமாகியுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு சுமார் 2,300 வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழைய முடிவதாக அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக ஒரு மணிநேரத்துக்கு சுமார் 1,400 வாகனங்கள் மட்டுமே மலேசியாவுக்குள் நுழைந்தன.
குறுகிய காலத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகளால் இது சாத்தியமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாங்குனான் சுல்தான் இஸ்கந்தார் சுங்கச் சாவடி உள்ளிட்டவற்றில் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மலேசியாவின் குடிநுழைவுப் பிரிவு தலைமை இயக்குநர் கைருல் ட்ஸ்ாய்மி தாவுத் குறிப்பிட்டார்.
சோதனை முறைகளை மேம்படுத்த இம்மாதம் ஆறாம் தேதியன்று வேகமாக இயங்குவதற்கு வழிவகுக்கும் 'கியூஆர்டி' நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. அதையடுத்து நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'கியூஆர்டி', போக்குவரத்து நெரிசலைக் கையாள உதவும் குறுகிய காலத் திட்டம் என்று திரு கைருல் சொன்னார்.
"குடிநுழைவு மின்நுழைவாயிலை சிங்கப்பூரர்கள் இப்போது பயன்படுத்த முடிவதால் பேருந்தில் ஜோகூருக்கு வருவோர் இனி குடிநுழைவுச் சோதனைகளை விரைவில் கடக்கலாம். முன்னதாக மலேசியக் கடப்பிதழ்களை வைத்திருப்போர் மட்டுமே அதைப் பயன்படுத்த முடிந்தது," என்று திரு கைருல் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் 20ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரர்கள் மின்நுழைவாயிலைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

