கஹ்ரமான்மராஸ் (துருக்கி): துருக்கி, சிரியா ஆகியவற்றை உலுக்கிய நிலநடுக்கதில் மாண்டோரின் எண்ணிக்கை ஆகக் கடைசி நிலவரப்படி 35,000ஐத் தாண்டியுள்ளது. அதே வேளையில், நிலநடுக்கம் உலுக்கி சுமார் ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில் பலர் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்டும் வருகின்றனர்.
ஓர் ஏழு வயது சிறுவனும் 62 வயது மாதும் எதிர்பாரா வகையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே, போரால் அவதிப்படும் சிரியாவின் நிலநடுக்கம் உலுக்கிய பகுதிகளுக்கு உதவிப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை ஐக்கிய நாட்டு நிறுவனம் ஒப்புக்கொண்டது.
உதவிப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் ஐக்கிய நாட்டுக் குழு வடமேற்கு சிரியாவைச் சென்றடைந்தது. எனினும், வீடுகளை இழந்த மில்லியன்கணக்கானோருக்குக் கைகொடுக்க இன்னும் பெரிய அளவில் உதவி தேவை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நிவாரணப் பணித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டார்.

