கோலாலம்பூர்: மலேசியாவில் பொருள், சேவை வரி மீண்டும் நடைமுறைப்படுத்தப்படாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அதிகமான தேசியக் கடனை மலேசியா எதிர்நோக்கி வருகிறது. இருந்தாலும் பொருள், சேவை வரியைப் போல் பல பயனீட்டாளர்களைக் குறிவைக்கும் எந்த வரியும் நடைமுறைப்படுத்தப்படாது என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலாக செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது, ஊழலைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமது அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
"மின்சார வரியில் செய்ததைப் போல் செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று திரு அன்வார் சொன்னார். தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோவின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது திரு அன்வார் இதைக் குறிப்பிட்டார்.
மலேசியாவில் முன்னதாக மின்சார வரிக் கட்டணங்கள் உயர்த்தப்படவிருந்தது. பிரதமராகப் பதவியேற்ற பிறகு திரு அன்வார் பொதுமக்களுக்கான மின்சார வரியை உயர்த்தவில்லை. ஆனால், அனைத்துலக நிறுவனங்களுக்கு வரி உயர்வை நடைமுறைப்படுத்தினார்.
இதற்கிடையே, கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு திரு அன்வார் ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்றிரவு துருக்கிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.
பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் துருக்கிய மக்களுக்கு ஆதரவு ெதரிவிக்க திரு அன்வார் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். துருக்கிய அதிபர் ரிசெப் டாயிப் எர்டுவானுடன் பேசிய பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார்.
திரு அன்வார் இன்று மலேசியா திரும்புவார்.

