ஷாங்காய்: சீனாவின் மூன்று முன்னணி விமான நிறுவனங்களின் விமானச் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நன்கு மீண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் சைனா சவுதர்ன் ஏர்லைன்ஸ் விமானங்களின் 72.7 விழுக்காட்டு இருக்கைகள் நிரப்பப்பட்டன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த விகிதம் 63 விழுக்காடாகப் பதிவானது.
சீனாவின் மூன்று முன்னணி விமான நிறுவனங்களில் சைனா சவுதர்னின் விமானங்கள்தான் பயணிகளால் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.
ஏர் சைனா நிறுவனத்தின் விமானங்களில் 69.9 விழுக்காட்டு இருக்கைகள் சென்ற மாதம் நிரப்பப்பட்டன. சைனா ஈஸ்டர்ன் நிறுவனத்தின் விமானங்களுக்கு இந்த விகிதம் 68.3 விழுக்காடாகப் பதிவானது.
பயன்படுத்தப்படும் இருக்கைகளின் விகிதம், விமான நிறுவனங்களால் எவ்வளவு லாபம் ஈட்ட இயலும் என்பதற்கான அறிகுறி.
எல்லைக் கட்டுப்பாடுகள் உட்பட சீனாவில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நீடித்த கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் சென்ற ஆண்டிறுதியில் விலக்கப்பட்டன. அதையடுத்து சீனப் புத்தாண்டை யொட்டி சென்ற மாதம் குடும்பத்தாருடன் நேரம் செலவிட பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர். அது, அதிகமானோர் விமானச் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு முக்கியக் காரணமாகும்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக சைனா சவுதர்ன், ஏர் சைனா, சைனா ஈஸ்டர்ன் ஆகிய மூன்று நிறுவனங்களும் கடந்த மூன்றாண்டுகளில் 190 பில்லியன் யுவென் (37 பில்லியன் வெள்ளி) தொகையை இழக்க நேரிட்டது. சென்ற ஆண்டு அவற்றின் இழப்பு மேலும் மோசமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

