வெலிங்டன்: கேப்ரியேல் புயல் காரணமாக நியூசிலாந்தில் மாண்டோர் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 8ஆக அதி
கரித்துள்ளது. மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பல நகரங்கள், கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளை அவசரகால மீட்புப் பணியாளர்களால் சென்றடைய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடக்குத் தீவின் வடக்குப் பகுதியை புயல் உலுக்கியுள்ளது. அங்கிருந்து அது கிழக்குக் கடற்கரையோர மாகச் செல்கிறது. அது செல்லும் வழியெல்லாம் மனதைப் பதறவைக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் அங்குள்ள மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது.
பண்ணைகள், பாலங்கள் ஆகியவை இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பல கால்நடைகள் மடிந்துவிட்டன. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை அடுத்து, பலர் தங்கள் வீட்டுக் கூரைகள் மீது நின்று உதவிக்காக காத்திருப்பதாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் நிலவரப்படி 4,500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாயமானவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிருக்காது என்று நியூசிலாந்து காவல்துறை நம்புகிறது. அவர்களில் பலரிடம் கைப்பேசி இல்லாமல் இருந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் பல பண்ணைகள் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, அங்கு விளைந்திருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் நாசமாகின.
இதன் விளைவாக காய்கறிகள், பழங்களின் விலை வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான ஹாக்ஸ் பேயில் இரண்டு தற்காலிகப் பிண அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 62,000 வீடுகளில் இருப்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி
இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகளில் உதவ ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணத்துவக் குழு ஒன்று வந்திருப்பதாக நியூசிலாந்துப் பிரதமர் ஹிப்கின்ஸ் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் தவிப்போருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்குடன் அப்பகுதிகளுக்கு லாரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
நியூசிலாந்தின் கிழக்குக் கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்பவர்களுக்கு கப்பல், விமானங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை நியூசிலாந்து ராணுவம் அனுப்புகிறது.
ஹாக்ஸ் பேயில் உள்ள கிராமப் பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலையைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ ஹெலிகாப்டர், படகுகள் மூலம் மீட்புப் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.

