இஸ்தான்புல்: துருக்கியையும் சிரியாவையும் கடந்த வாரம் புரட்டிப்போட்ட மிக மோசமான நிலநடுக்கத்திலிருந்து உயிர்தப்பிய சிரியா குடும்பம் நேற்று மரணத்தின் பிடியில் சிக்கியது.
நிலநடுக்கத்திலிருந்து தப்பிய பிறகு அக்குடும்பம் துருக்கியில் ஓர் அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த வீட்டில் நேற்று தீ மூண்டது.
இதில் ஐந்து குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் மாண்டனர். மாண்ட குழந்தைகள் நான்கு வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
"அந்த வீடு கொழுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்தோம். சன்னல் வழியாகச் சிறுமி ஒருவர் காப்பாற்றப்படுவதைக் கண்டோம்," என்று அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காப்பாற்றப்பட்ட சிறுமி தீயில் கருகி மாண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரா என்பது இன்னும் தெரியவில்லை.
துருக்கியில் ஏறத்தாழ நான்கு மில்லியன் சிரியா மக்கள் வாழ்வதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

