ஹத்தே: துருக்கி நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து கானா காற்பந்து வீரரும் செல்சிக் குழுவின் முன்னாள் வீரருமான கிறிஸ்டியன் அட்சுவின் உடல் மீட்கப்பட்டது.
கடந்த 6ஆம் தேதி துருக்கியிலும் சிரியாவிலும் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு கிட்டத்தட்ட 44,000 போ் மாண்டுவிட்டனர்.
31 வயதான அட்சுவின் உடல் அடுத்த நாளே மீட்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அது உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
அட்சுவின் உடலும் அவரது கைபேசியும் மீட்கப்பட்டதாகவும் அவரது மற்ற உடைமைகள் கிடைக்கவில்லை என்றும் அட்சுவின் மேலாளர் சொன்னார்.
செல்சியின் மத்திய திடல் வீரராக நான்கு பருவங்களும் பின்னர் நியூகாசலுக்காகவும் விளையாடிய அட்சு, சென்ற செப்டம்பர் மாதம் துருக்கியின் ஹத்தேஸ்போர் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வந்தார்.
12 நாள்களுக்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்பு
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 11 நாள்களுக்குப் பிறகு, மிகவும் அதிசயக்கத்தக்க வகையில் 3 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 260 மணி நேரத்துக்குப் பிறகு, உஸ்மான் என்ற 14 வயது சிறுவனை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா்.
கட்டட இடிபாடுகளுக்கு உள்ளிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு அந்த சிறுவனை குழுவினா் மீட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதனைத் தொடா்ந்து 26 வயது, 33 வயது கொண்ட இரண்டு இளைஞா்களும் கட்டட இடிபாடுகளிலிருந்து அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனா்.

