சோல்: வடகொரியா அதன் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து மேலும் இரண்டு ஏவுகணைகளை நேற்று பாய்ச்சியது.
வடகொரியாவைத் தூண்டும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து நடந்துகொண்டால் கொரியத் தீபகற்பம் பற்றி எரியும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை ஒன்றை வடகொரியா பாய்ச்சியது.
அந்த ஏவுகணை ஜப்பானின் மேற்குக் கடற்பகுதிக்குள் விழுந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம் தென்கொரிய ஆகாயப் படையுடன் அமெரிக்கா இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. அதே நாளன்று ஜப்பானிய படைகளுடனும் அமெரிக்கப் படைகள் வேறோர் இடத்தில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டன. இவை வடகொரியா வைச் சினமடையச் செய்துள்ளன.
நேற்று இரண்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதை வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் உறுதி செய்து காணொளிகளை வெளியிட்டது.
395 கிலோமீட்டர், 337 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கு
களைக் குறிவைத்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது.
இந்த ஏவுகணைகள் தனது பிரத்தியேகப் பொருளியல் மண்டலத்துக்கு வெளியே கடலில் விழுந்ததாக ஜப்பானின் தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது. ஏவு
கணைகள் பாய்ச்சப்பட்டது குறித்து அவசரகாலக் கூட்டம் ஒன்றை ஐநா பாதுகாப்பு மன்றம் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கோரிக்கை விடுத்துள்ளார்.