அன்டாக்யா: துருக்கி-சிரியா எல்லைப் பகுதியை நேற்று முன்தினம் உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது அறுவர் மாண்டுவிட்டனர். அண்மையில் இப்பகுதியை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்திலிருந்து இரு நாடுகளும் மீண்டுவர முயற்சி செய்துவரும் வேளையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
ரிக்டரில் 6.4 அளவிலான இந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் நேர்ந்தது. துருக்கியின் தெற்குப் பகுதியில் இருக்கும் அன்டாக்யா நகரிலிருந்து தொடங்கிய நிலநடுக்கம் சிரியா, எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கம் நிலத்தடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உலுக்கியதாக ஐரோப்பிய, மெடிட்டெரனியப் பகுதிகளுக்கான நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் 294 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டதாகவும் துருக்கியின் சுகாதார அமைச்சர் ஃபாரெட்டின் கொக்கா தெரிவித்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு இப்பகுதியை உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தால் 47,000க்கும் அதிகமானோர் மாண்டனர். நூறாயிரம் கணக்கான வீடுகள் பெரும் சேதத்திற்கு உள்ளாயின அல்லது முற்றிலும் அழிந்துபோயின.
அந்த நிலநடுக்கம் உலுக்கிய பிறகு 90 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக துருக்கியின் பேரிடர், அவசரநிலை நிர்வாக ஆணையம் குறிப்பிட்டது. அவை, பொதுவாக நிலநடுக்கத்துக்குப் பின்பு வரும் நில அதிர்வுகள்.

