ரோம்: இத்தாலியில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 43 பேர் மாண்டுவிட்டனர். அந்நாட்டின் கடலோரக் காவற்படை வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
மாண்டவர்கள் அனைவரும் வெளிநாட்டவர். அவர்களில் ஒரு கைக்குழந்தையும் அடங்கும் என்று சில தகவல்கள் வெளியாயின.
வெளிநாட்டவர் சென்றுகொண்டிருந்த படகு இத்தாலியின் கிழக்குப் பகுதியில் உள்ள கலாப்ரியா வட்டாரத்திற்கு அருகே மூழ்கியது. ஆகக் கடைசி நிலவரப்படி 80 பேர் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குரோட்டோன் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஸ்டெக்காட்டோ டி குட்ரோ பகுதியில் குறைந்தது 27 உடல்கள் கடற்கரைக்குத் தள்ளப்பட்டதாக இத்தாலியின் அன்சா செய்தி நிறுவனம் கூறியது. மேலும் சில உடல்கள் தண்ணீரில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மூழ்கிய படகில் 100க்கும் அதிகமானோர் இருந்ததாக அட்ன்குரோனோஸ் செய்தி நிறுவனம் சொன்னது. ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தோரை ஏற்றி வந்த படகு மோசமான பருவநிலை காரணமாக பாறைகளின்மேல் மோதி விபத்துக்கு உள்ளானது.
கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் பல வெளிநாட்டவர் இத்தாலிக்கு வருவதுண்டு. அத்தகையோர் பயன்படுத்தும் 'மெடிட்டெரனியன் ரூட்' எனப்படும் கடற்பாதை உலகின் ஆக அபாயகரமான பாதைகளில் ஒன்று.
2014ஆம் ஆண்டிலிருந்து 20,000க்கும் மேற்பட்டோர் மத்திய மெடிட்டெரனியன் பகுதியில் காணாமற்போயினர் அல்லது உயிரிழந்துவிட்டனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

