மாஸ்கோ: ரஷ்யாவின் நிலைப்பாட்டை செவிமடுத்தால்தான் அமெரிக்காவுடன் அணுவாயுதங்களைக் குறைக்கும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம் என்று கிரம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று அறிவித்தார்.
கடந்த வாரம் உக்ரேன் போர் தொடர்பில் மேற்கத்திய நாடுகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்திருந்தார்.
தனது உத்திபூர்வ விமானப் படைத் தளங்களைத் தாக்கும் முயற்சிகளில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையே இஸ்வெஸ்டியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மாஸ்கோ மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடு களின் அணுகுமுறை மாற வேண்டும் என்று திரு பெஸ்கோவ் தெரிவித்தார்.
உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கும் நேட்டோ எங்களுடைய எதிரிகள் என்று அவர் கூறினார்.
இரு தரப்பிலும் போரைப் படிப்படியாகக் குறைப்பதை வலியுறுத்தும் சீனாவின் அமைதித் திட்டத்தைப் பற்றி கருத்துரைத்த திரு பெஸ்கோவ், பெய்ஜிங்கின் யோசனை கேட்கப்பட வேண்டும் என்றார்.
பிரச்சினையைத் தீர்க்க உதவும் எந்தவோர் அமைதி முயற்சியையும் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரேனுக்குள் ஆயிரக்கணக்கான துருப்புகளை மாஸ்கோ அனுப்பியபோது ரஷ்யாவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள சீனா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் வெள்ளிக் கிழமை உக்ரேன் போர் நிறுத்தத்துக்கு சீனா பகிரங்கமாக அழைப்பு விடுத்தது.
உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸிகியும் பெய்ஜிங்கின் 12 அம்ச அமைதித் திட்டத்தை பரிசீலிப்பதாகத் தெரிவித்து உள்ளார்.

