லாரிசா: கிரீஸில் நிகழ்ந்த மிக மோசமான
ரயில் விபத்தால் மக்கள் ஆத்திரமடைந்து உள்ளனர். ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கியிருக்கும் கருகிய சடலங்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர். இதனால் கிரீஸ் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
லாரிசா நகரில் செவ்வாய்க்கிழமை பின்னேரத்தில் 350க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேக ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இதன் காரணமாக சில பெட்டிகளில் உஷ்ணம் 1,300 டிகிரிக்கு அதிகரித்து தீப்பற்றி எரிந்தது.
"வெப்பம் 1,200 டிகிரிக்கும் அதிகமாக இருந்ததால் பெட்டிக்குள் நுழைய முடிய வில்லை. யாரையும் காப்பற்ற முடியவில்லை. சடலங்களே மீட்கப்பட்டன," என்று 40 வயது மீட்புப் பணியாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இறந்தவர்களில் பெரும்பாலோர் பல் கலைக் கழக மாணவர்கள். நீண்ட விடுமுறை காரணமாக அவர்கள் வீடு திரும்பியபோது விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தால் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏதென்ஸில் உள்ள ரயில் அலுவலகத்தின் மீது மக்கள் கற்களை வீசித் தாக்கினர். அவர்களை கண்ணீர்ப்புகையை வீசி காவல்துறையினர் கலைத்தனர். தெசாலொலினிக்கியிலும் ஆர்ப்பாட்டம் வெடித்தது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டன். ரயில்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் கேட்காததால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர் என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

