பெய்ஜிங்: சீனாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு நெருக்கமான லி சியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் எட்டாவது பிரதமரை முடிவு செய்வதற்காக நடந்த வாக்கெடுப்பில் 2,936 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் மூவர் சியாங்கிற்கு எதிராக வாக்களித்தனர். எட்டுப் பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
சீனாவில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் பெயர் அளவில் மட்டும் ஆட்சி செய்வார். நாட்டின் அதிகாரம் மொத்தமும் அதிபர் வசம்தான் உள்ளது.
சென்ற அக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட முக்கியத் தலைவர்கள் பட்டியலில் லி சியாங்கின் பெயர் இடம் பெற்றிருந்தபோதே அவர் அடுத்த பிரதமராகக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது.
லி சியாங், 2004 முதல் 2007க்கு இடையிலான கால
கட்டத்தில் அதிபர் ஜின்பிங்கின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
ஷாங்காய்யின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் இருந்த சியாங், பிரதமர் பதவியின் தொடக்கத்தில் சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் 63 வயதான லி சியாங் எவ்வாறு செயல்படுவார் என்று தெரிந்துக்கொள்வதில் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன.
அதே சமயம் ஜின்பிங் ஓரங்கட்டியதாகக் கூறப்படும் கெக்கியாங்கைவிட, லி சியாங்கிற்கு பொருளாதாரத்தை நிர்வகிக்க அதிக அதிகாரங்கள், வாய்ப்புகள் வழங்கப்படக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பிரதமர் பதவி மட்டுமல்லாமல், தேசிய மக்கள் காங்கிரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் தலைமைப் பதவிகளிலும் தனது விசுவாசிகளை நியமித்து கட்சி, ஆட்சி என இரண்டிலும் ஜின்பிங் தனது பிடியை வலுவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
புதிய சீனப் பிரதமர் லி சியாங்கிற்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சீனப் பிரதமர் லி சியாங்கிற்கு அவர் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவு தொடர்ந்து மேம்படும் என்று தாம் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

