கோலாலம்பூர்: அடுத்த ஆறு மாதங்களிலோ ஓராண்டிலோ பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் கொண்டு வரும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், மலேசியர்களின் வருமான நிலை இன்னும் குறைவாகவே உள்ளது என்றார்.
"ஜிஎஸ்டி என்பது சக்திவாய்ந்த, ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு முறை. அதனை மீண்டும் அமல்படுத்த மலேசியா தயாராக இல்லை என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறேன்.
"மக்களின் வருவாய் நிலை இன்னும் குறைவாகவே உள்ளது என்பதால் அடுத்த ஆறு மாதத்திலோ அல்லது ஓராண்டிலோ ஜிஎஸ்டியை கொண்டுவருவது பற்றி எந்த ஒரு பரிசீலனையும் செய்யப்படவில்லை.
"ஜிஎஸ்டியை அமல்படுத்தும் முன்னர் மக்களின் வருமான நிலை உயரவேண்டும் என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது.
"பி40 எனப்படும் 40 விழுக்காட்டுக்கும் கீழ் வருமானம் ஈட்டக்கூடியோரின் பிரிவில் இன்னும் ஏராளமானோர் உள்ளனர். மேலும், 130,000 பேர் பண வசதியின்றி சிரமப்படுகின்றனர்," என்று திரு அன்வார் கூறினார்.
ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டுவருவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்று தஞ்சோங் காராங் தொகுதி உறுப்பினர் டாக்டர் ஸுல்காஃபெரி ஹனாபி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அன்வார் பதிலளிக்கையில் இந்த விவரங்களை அளித்தார்.
ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் ஜிஎஸ்டியை மலேசிய அரசாங்கம் கொண்டு வரலாம் என்று கூறப்படுவது பற்றி அவர் விளக்கம் கேட்டிருந்தார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த ஆறு மாநிலத் தலைவர்களும் கடந்த மாதம் ஒன்றுகூடிப் பேசினர்.
ஜூன் இரண்டாம் வாரத்தில் தங்களது சட்டமன்றத்தைக் கலைக்க இந்த ஆறு தலைவர்
களுக்கு இடையில் கருத்திணக்கம் ஏற்பட்டது. கலைப்புக்குப் பின்னர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்.
மலேசியப் பிரதமர்: மக்கள் வருமானம் உயர்ந்த பின்னரே பரிசீலனை

