கோலாலம்பூர்: மலேசியாவின் 5ஜி தொலைத்தொடர்புக் கட்டமைப்பைச் செயல்படுத்தும் 'டிஎன்பி' எனும் டிஜிட்டல் நேசியோனால் பர்ஹாட் நிறுவனத்தில் தற்போது தலைமை நிர்வாகி பொறுப்பில் எவரும் இல்லை.
அப்பொறுப்பை வகித்த திரு அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் என்பவரின் தவணைக் காலம் கடந்த சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. அவருக்குப் பதிலாக வேறு யாரும் நியமிக்கப்படாததைத் தொடர்ந்து இந்நிலை உருவெடுத்துள்ளது.
அரசாங்க நிறுவனமான 'டிஎன்பி'க்கு ஏற்கெனவே தலைவர் பொறுப்பில் யாரும் இல்லாமல் இருந்தது. இப்போது தலைமை நிர்வாக அதிகாரியும் இல்லை.
தலைவர்களின்றி நிறுவனம் சொந்தமாக இயங்கும் உணர்வு இருப்பதாக பலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
"கடந்த திங்கட்கிழமை முதல் தலைமை நிர்வாக அதிகாரி என்று யாரும் இல்லை. எனினும், 'டிஎன்பி'க்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள், 5ஜி கட்டமைப்புக்கான திட்டங்கள் ஆகியவற்றை ஆலோசிப்பதற்கான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை தொடரவும் செய்யும்," என்று பெயர் வெளியிடாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
மலேசியாவில் 5ஜி கட்டமைப்பைச் செயல்படுத்துவது குறித்து இம்மாத இறுதிக்குள் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி அதைச் செய்துமுடிப்பது சாத்தியம் என்று அந்நாட்டின் மின்னிலக்க, தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் தொடர்ந்து உறுதியளித்து வந்துள்ளார்.

