ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள புத்திரி துறைமுகப் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டுக் கட்டடத்துக்கு அருகே ஆயுதம் ஏந்திய நபர்கள் பட்டப் பகலில் ஒருவரிடமிருந்து கொள்ளை அடித்திருக்கின்றனர்.
தாக்குதலுக்கு ஆளானவர் ஓர் இணைய வர்த்தகர். அவரின் கால்களிலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் காணொளியில் பதிவுசெய்யப்பட்டது. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இணைய வர்த்தகரின் 'பிக்கப் டிரக்' வாகனத்தை வழிமறித்து பாராங்கல் போன்ற ஆயுதங்களை வைத்திருந்த ஆடவர்கள் அவரைத் தாக்கினர். இணைய வர்த்தகர், வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
வாகனக் கதவைத் திறந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் வர்த்தகரைத் தாக்கினர். வாகனத்திலிருந்து அவர் ஓடியபோதும் அந்நபர்கள் அவரைத் துரத்திப் பிடித்துத் தாக்கி அவரிடமிருந்து திருடினர். ஆகக் கடைசி நிலவரப்படி இரண்டு சந்தேகநபர்களைக் காவல்துறையினர் பிடித்தனர்.

