யங்கோன்: மியன்மாரின் மத்திய பகுதியில் உள்ள மடாலயத்தில் பௌத்த பிக்குகள் மூவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்துரைத்த ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள், அப்பாவி மக்களை குறிவைத்து ராணுவம் நடத்திய தாக்குதல் என்று கூறியது. ஆனால், இந்த சம்பவம் குறித்து பேசிய ராணுவப் பேச்சாளர் ஒருவர், தெற்கு மியன்மாரில் உள்ள ஷான் மாநில பின்லாங் பகுதியில் அங்குள்ள கிளர்ச்சிக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் அப்பாவி மக்கள் எவரையும் ராணுவம் தாக்கிக் கொல்லவில்லை என்றும் அவர் விளக்கினார்.
ஸோ மின் தான் என்ற அந்த ராணுவப் பேச்சாளர் கரேன் தேசிய தற்காப்புப் படை என்ற போர்வையில் கிளர்ச்சிக்காரர்கள் மற்றொரு போராளிக் குழுவுடன் சேர்ந்து நான் நியேன்ட் என்ற கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "திடீரென அந்த பயங்கரவாதக் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சில கிராமவாசிகள் கொல்லப்பட்டனர், வேறு சிலர் காயமடைந்தனர்," என்று கூறினார்.
எனினும், இது குறித்து மேல் விளக்கம் அறிய தமது செய்தியாளர் தொலைபேசி வழி தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டது பயனில்லாமல் போனதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கரேன் தேசிய தற்காப்புப் படையைச் சேர்ந்த பேச்சாளர், தமது போராளிகள் அந்த கிராமத்தில் இம்மாதம் 12ஆம் தேதி நுழைந்தபோது, அங்குள்ள பௌத்த மடாலயத்தில் இறந்த உடல்கள் சிதறிக் கிடந்ததாகத் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் அந்தப் போராளிப் படையினர் வழங்கிய புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் ஆகியவற்றில் பலரின் உடல் பகுதிகளிலும் தலையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் பலர் இறந்து கிடப்பது தெரிய வருவதாக செய்தித் தகவல்கள் விவரிக்கின்றன.
எனினும் இந்தப் புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. இறந்தவர்கள் அனைவரும் சாதாரண குடிமக்கள் என்று தெரிவதாக ராய்ட்டர்ஸ் விளக்கியது.

