கோலலாம்பூர்: கட்டுமானம், தோட்டத்தொழில், உற்பத்தி, வேளாண்மை, சேவைகள் ஆகிய ஐந்து முக்கியத் துறைகளில் பணியாற்ற 995,396 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை அனு
மதிச்சீட்டு வழங்க மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த எண்ணிக்கை தொழில்துறைகளின் வெளிநாட்டு ஊழியர் தேவையைப் பூர்த்திசெய்யும் என எதிர்பார்ப்பதாக மலேசிய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஆகையால், வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்பு விதித்தளர்வுத் திட்டத்தின்கீழ் இனிமேல் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்பதையும் ஒப்புதல் அளிப்பதையும் மறுஅறிவிப்பு வெளியாகும்வரை ஒத்திப்போட மலேசிய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது என்று அமைச்சர் சிவகுமார் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள், அவர்களை வேலையில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனுமதி அளிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் வெளிநாட்டு ஊழியர்கள் மலேசியாவிற்கு வரும் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றும் அவர் சுட்டினார்.