லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வீட்டைச் சோதனையிடுவதற்காக காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது வழக்கு விசாரணைக்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் சென்றிருந்தார்.
வீட்டிற்கு வெளியே மணல் மூட்டைகள், கப்பல் கொள்கலன்கள் போன்றவற்றை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இதுபற்றி கூறிய இம்ரான் கான், “லாகூர் வீட்டில் தனது மனைவி தனியே இருந்தபோது காவல்துறையினர் அத்துமீறி உள்ளே புகுந்துள்ளனர். என் மீது கொலை முயற்சி தாக்குதலில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர்,” என்றார் அவர்.
தாம் பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக விற்றது தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். அப்போது தாம் கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். வரும் தேர்தலில் தாம் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனங் களில் ஒன்றின்மீது மற்றோர் வாகனம் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்தனர். மேலும் ஒன்பது வழக்குகளில் லாகூர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணை வழங்கி உள்ளது.