மாஸ்கோ: சீன அதிபர் ஸி ஜின்பிங் ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஒன்று திரண்டுள்ளன.
எனவே, சீனாவின் ஆதரவை ரஷ்யா எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், இருதரப்புக்கு இடையே நடுநிலையுடன் இருந்து அமைதியை நிலைநாட்ட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை அதிபர் புட்டினிடம் அதிபர் ஸி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேனிய சிறுவர்களை ரஷ்யாவுக்கு நாடு கடத்தியது தொடர்பாக புட்டினுக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
இது ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமிக்க நடவடிக்கை என்று அதிபர் புட்டின் சாடியுள்ளார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல் நியாயமற்றது என்று சீனா அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.

