மணிலா: பிலிப்பீன்சில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் எச்சரித்துள்ளார். சுமார் 11 மில்லியன் குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.
வறட்சிக் காலம் நெருங்கும் வேளையில் பலருக்கு சுத்தமான நீர் கிடைக்காமல் போகலாம் என்று திரு மார்க்கோஸ் கூறினார். இப்பிரச்சினையைக் கையாள நவீன நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப முறைகளை பிலிப்பீன்ஸ் உபயோகிக்கவேண்டும் என்று அவர் சொன்னார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் திரு மார்க்கோஸ் பேசினார். பிலிப்பீன்ஸ் தொடர்ந்து நிலத்தடியில் உள்ள நீரை அதிகம் சார்ந்திருக்கிறது. இந்நிலையில் நிலத்துக்கு மேல் உள்ள நீரை நன்கு பயன்படுத்திக்கொள்ள தனது நீர் சுத்திகரிப்பு முறைகளை அந்நாடு மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதைத் திரு மார்க்கோஸ் சுட்டினார். அவ்வாறே அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றும் அவர் சொன்னார்.
பிலிப்பீன்சில் இன்னமும் அசுத்தமான கிணறுகள், ஆறுகள், கால்வாய்கள் போன்றவற்றிலிருந்து வரும் நீரை சுமார் 11 மில்லியன் குடும்பங்கள் பயன்படுத்துவதாக அந்நாட்டின் தேசிய நீர் வளப் பிரிவு அண்மையில் தெரிவித்தது. அந்த எண்ணிக்கை, பிலிப்பீன்சில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியாகும்.
பிலிப்பீன்சில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று முன்னுரைப்பு

