மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கைதுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது ரஷ்யாமீது போர் தொடுப்பதாகும் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் கூறியுள்ளார். அவர், திரு புட்டினின் ஆதரவாளர் ஆவார்.
திரு புட்டினைக் கைதுசெய்வதற்கு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் சென்ற வாரம் ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து திரு மெட்வடேவ் இவ்வாறு சொன்னார்.
இதற்கிடையே, பாக்முட் நகரில் ரஷ்யப் படைகள் நடத்தி வந்த தாக்குதல்களின் வேகம் குறைந்துள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது. பதில் தாக்குதல்களை மேற்கொள்ளத் தாங்கள் தயாராய் இருப்பதாகவும் உக்ரேன் குறிப்பிட்டது.
முன்னதாக, உக்ரேனின் ரிஷிஸ்சிவ், ஸப்போரிஷ்சியா நகரங்களின்மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

