மீண்டும் உலகின் சிறந்த பத்து விமான நிலையங்களுக்குள் ஒன்றாக இடம்பெறும் என நம்பிக்கை
கோலாலம்பூர்: மலேசியாவின் முதன்மையான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் பேரளவில் மறுசீரமைக்கப்பட இருக்கிறது.
வரும் 2028ஆம் ஆண்டிற்குள் மீண்டும் அவ்விமான நிலையத்தை உலகின் சிறந்த பத்து விமான நிலையங்களுக்குள் ஒன்றாக இடம்பெறச் செய்யும் நம்பிக்கையுடன் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
குடிநுழைவு முகப்புகளில் நீண்ட வரிசை, விமான நிலையத்தினுள் செயல்படும் 'ஏரோட்ரெயின்' இணைப்பு ரயில்கள் அடிக்கடி நின்றுபோவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அவ்விமான நிலையத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாண்டிற்கான 'ஸ்கைடிராக்ஸ்' சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் கோலாலம்பூர் விமான நிலையம் மேலும் ஐந்து இடங்கள் சரிந்து, 67வது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், பயணிகள் தாங்களாக பயணப்பைகளைப் போடும் வசதி, 'செக்-இன்' முகப்புகள் மறுவடிவமைப்பு, புதிய ஏரோட்ரெயின், பயணப்பை கையாளும் வசதி, புதிய ஓய்வறைகள், உணவு, பான நிலையங்கள் உள்ளிட்ட மாற்றங்கள் இடம்பெறும் என்று மலேசிய விமான நிலையக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் இஸ்கந்தர் மிஸல் மஹ்மூத் தெரிவித்தார்.
"கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு மீண்டும் பொலிவூட்ட விரும்புகிறோம்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் சொன்னார்.
கடந்த 1998ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அவ்விமான நிலையம், 2001, 2010, 2011, 2012 என நான்கு முறை உலகின் சிறந்த பத்து விமான நிலையங்களுக்குள் ஒன்றாக வந்தது. அதன்பிறகு அது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் பட்டியலில் 67ஆம் இடத்திற்கு இறங்கியது ஏமாற்றம் அளிப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறினார். அண்மைய ஆண்டுகளாக அங்கு பராமரிப்பு மோசமாக உள்ளது என்ற அவர், அதற்கு கொவிட்-19 தொற்றுப் பரவலும் முடக்கநிலை அறிவிப்புகளும் ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அவ்விமான நிலையம் 35 மில்லியன் பயணிகளைக் கையாண்ட நிலையில், சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 25 மில்லியனாக இருந்தது.
இவ்வட்டாரத்திலேயே பயணப்பைகளைக் கையாளும் வசதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்தான் ஆக மோசம் என்றார் மலேசிய சுற்றுலா, பயண முகவர்கள் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளர் ஃபயீஸ் ஃபதில்லா.
சிங்கப்பூரில் குடிநுழைவு நடைமுறைக்குப்பின் சில நிமிடங்களில் பயணிகள் தங்களது பயணப்பைகளைப் பெறமுடியும் என்ற நிலையில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் 30 நிமிடங்கள்வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

