ஜாக்சன் (அமெரிக்கா): அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் 'டொர்னேடோ' சூறாவளியாலும் இடியுடன் கூடிய கனமழையாலும் குறைந்தது 14 பேர் மாண்டனர். குறைந்தது 23 பேர் மாண்டுவிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.
பல கட்டடங்கள் சேதமடைந்தன. சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 160 கிலோமீட்டர் தூரத்துக்கு சூறாவளியாலும் கனமழையாலும் சேதம் ஏற்பட்டிருந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஷார்க்கி, ஹம்ஃபிரீஸ் ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக மிசிசிப்பி அவசர சேவை நிர்வாக அமைப்பின் தொடர்பு தகவல் பிரிவு கூறியது. மிசிசிப்பியின் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
சூறாவளியால் சில்வர் கெளன்டி, ரோலிங் ஃபோக் ஆகிய நகரங்களில் சேதம் ஏற்பட்டதாக ஜாக்சன் நகரில் இருக்கும் தேசிய பருவநிலை சேவை அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை நிலவரப்படி அலபாமா, மிசிசிப்பி, டெனசி ஆகிய மாநிலங்களில் 80,000க்கும் அதிகமானோர் மின்தடையால் பாதிக்கப்பட்டனர்.

